Last Updated : 15 May, 2018 07:48 PM

 

Published : 15 May 2018 07:48 PM
Last Updated : 15 May 2018 07:48 PM

கோவா, மணிப்பூர் முன் உதாரணம்: ஆளுநர் வாஜுபாய் எதைப் பின்பற்றப்போகிறார்?: பாஜகவினர் கலக்கம்

கோவா, மணிப்பூரில் ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்புள்ள கட்சியை அழைத்து ஏற்கனவே முன்னுதாரணமாக நடைமுறையை ஆளுநர்கள் கடைபிடித்துள்ளநிலையில், கர்நாடகாவிலும் அதே நடைமுறை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 12-ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பாஜக 99தொகுதிகளிலும், காங்கிரஸ் 76 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

 காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்குமாறும், அதற்கு ஆதரவு அளிப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டு, ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம்,தேர்தலில் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்கவிட்டாலும்கூட, தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. ஆதலால், அந்தக் கட்சியும் தன்னாலும் ஆட்சி அமைக்க முடியும், தங்களையும் அழைக்க வேண்டும் எனக் கோரி ஆளுநரிடம் பாஜக கடிதம் அளித்துள்ளது.

இந்தச்சூழலில் ஆளுநர் வாஜுபாய் வாலா காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பாரா, அல்லது, பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பாரா என்பது கேள்வியாக இருக்கிறது.

இதற்கு முன் கோவா, மணிப்பூரில் இருந்த பாஜக நியமித்த ஆளுநர்கள் இரு அனுபவப்பாடங்களை கற்பித்துவிட்டனர். அந்த அனுபவப்படி ஆளுநர் செயல்படுவாரா அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படுவாரா என்பது தெரியவில்லை.

கடந்த ஆண்டு கோவா தேர்தலிலும், சமீபத்தில் நடந்த மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைதேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது.

தேர்தல் முடிந்தபின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தனிப்பெரும் கட்சியைத்தான் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்.

ஆனால், அங்குப் பதவியில் இருந்த கோவா ஆளுநர் மிருதுளா சிங், மணிப்பூர் ஆளுநர் சுரா சந்த் சிங் ஆகியோர் பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைக்கவே வாய்ப்பளித்து தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியை அழைக்கவில்லை.

இந்நிலையில் பாஜகவுக்கு ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க வேண்டும் என்பதற்காகக் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் இருந்த பாஜக அரசு நியமித்த ஆளுநர்கள் காங்கிரஸ் கட்சிக்கு முன்னுரிமை அளிக்காமல், பாஜகவுக்காக அழைத்தனர்.

அதேநடைமுறை கர்நாடகத்தில் பின்பற்றப்படுமா அல்லது, கர்நாடகத்தில் மட்டும் அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் நடந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டப்படி நடக்க வேண்டும் ஆளுநர் வாஜுபாய் வாலா விரும்பினால் முதலில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் பாஜகவை அழைக்க வேண்டும். அவ்வாறு பாஜகவை அழைத்தால், கோவா, மணிப்பூரில் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் செய்த செயல் கேள்விக்கு உள்ளாக்கப்படும்.

அந்த மாநிலங்களுக்கு ஒரு நீதி, கர்நாடக மாநிலத்துக்கு ஒரு நீதியா, அரசியலமைப்புச்சட்டத்தை தேவைக்குத் தகுந்தார்போல் ஆளுநர் வளைத்துக்கொள்வார்களா என்ற கேள்வி எழுகிறது.

அதேசமயம், கோவா, மணிப்பூர் மாநில ஆளுநர்களின் அடிவழியை பின்பற்றக் கர்நாடக ஆளுநரும் முடிவு செய்தால், ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பார். இதில் எதைச் செய்யப்போகிறார் என்பது கேள்விக்குறியாகும்.

கர்நாடக மாநிலத்தில் ஆளுநர் வாஜுபாய் வாலா யாரை ஆட்சி அமைக்க அழைப்பார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x