Published : 15 May 2018 10:21 AM
Last Updated : 15 May 2018 10:21 AM

சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்னடைவு: பதாமியில் முன்னிலை

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக இன்று நடந்து வருகிறது. முதல்வர் சித்தராமையா தான் போட்டியிட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஆனால், பதாமி தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

காலை 9 .55 மணி நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கட்சி 70 இடங்களிலும், பாஜக 105 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல்வர் சித்தராமையா தான் போட்டியிட்ட பதாமி தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார். அதேசமயம், மற்றொரு தொகுதியான சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்தங்கியுள்ளார்.

முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் மஜத வேட்பாளர் ஜி.டி. தேவேகவுடாவை எதிர்த்து போட்டியிட்டார். காலை 9.30 மணி நிலவரப்படி தேவகவுடாவைக் காட்டிலும் 13 ஆயிரம் வாக்குகள் பின்னடைந்துள்ளார் சித்தராமையா.

சித்தராமையா கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து, இந்த தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றிபெற்றுள்ளார். இந்த தொகுதியில் உள்ள மைசூரு நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் தான் சித்தராமை பிறந்த சித்தராமணஹன்டி அமைந்துள்ளது. ஆனால், அங்கு தற்போது பின்னடைந்துவருவது அதிர்ச்சியை அளிக்கிறது.

அதேசமயம், பதாமி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலுவைக் காட்டிலும் முன்னிலைப் பெற்றுள்ளார் முதல்வர் சித்தராமையா.

மும்பை-கர்நாடக பகுதியில் உள்ள பதாமி தொகுதி பாஹல்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் தனக்கு போதுமான ஆதரவு இருக்காது என்பதை அறிந்த சித்தராமையா, பதாமி தொகுதியில் போட்டியிட்டார். ஏனென்றால் பதாமி தொகுதியில் சித்தராமையாவின் குருபா சமூகத்தினர் அதிகம் இருப்பதால் அங்கு போட்டியிட்டார். அதேசமயம் தனது சொந்த தொகுதியான வருணாவை தனது மகன் யதிந்திராவுக்கு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x