

லக்னோ: மதமாற்றத்தை அனுமதித்தால் நாட்டில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதமாற்றத்துக்காக உத்தர பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூரில் இருந்து டெல்லியில் நடைபெற்ற கிறிஸ்தவ பிரச்சாரக் கூட்டத்துக்கு பொதுமக்களை அழைத்துச் சென்றதாக கைலாஷ் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கைலாஷ் மீது மத மாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற கிறிஸ்தவ கூட்டத்துக்கு ராம்காலி என்பவரை கைலாஷ் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அதன்பின்னர் ராம்காலி வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக ராம்காலியின் சகோதரர் பிரஜாபதி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி கைலாஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பான விசாரணை நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது மாநில அரசு சார்பில்ஆஜரான கூடுதல் அட்வகேட்ஜெனரல் பி.கே. கிரி வாதிடும்போது, “இதுபோன்று நடைபெறும் கூட்டங்கள், மாநாடுகளின்போது ஏராளமான மக்கள் கிறிஸ்தவ மதத்துக்குமாற்றப்படுகின்றனர். இதே நிலைதான் ராம்காலி விவகாரத்திலும் நடந்துள்ளது. தனது கிராமத்திலிருந்து கைலாஷ் ஏராளமான மக்களை அழைத்து சென்றுள்ளார். இதை தடுக்கவேண்டும்’’ என்றார்.
கைலாஷ் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் சாகேத் ஜெய்ஸ்வால் கூறும்போது, “இந்து மக்களை அழைத்துச்சென்று கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் செயலை கைலாஷ் செய்யவில்லை. ராம்பால், கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்படவில்லை. அவர் அந்தக் கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பாதிரியார் சோனு என்பவர் பங்கேற்றுப் பேசினார். அவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்’’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் கூறும்போது, “அரசியலமைப்பு சட்டப்பிரிவின் 25-வதுபிரிவானது தாம் விரும்பிய தொழிலைச் செய்தல், மனதில் உருவாகும் கருத்தை சுதந்திரமாக தெரிவிப்பது, மத நம்பிக்கைகளை பரப்புதல் ஆகியவற்றுக்கு வழிவகை செய்கிறது. ஆனால் மதம்மாறுவதற்கு அனுமதி வழங்கவில்லை. பிரச்சாரம் என்ற வார்த்தைக்கு ஊக்குவிப்பது என்று பொருள். ஆனால் எந்த ஒரு நபரையும் அவரது மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மாற்றுவது என்று அர்த்தமல்ல. மதமாற்றத்தை அனுமதித்தால், நாட்டிலுள்ள பெரும்பான்மையின மக்கள் ஒரு நாள் சிறுபான்மையின மக்களாக மாறிவிடுவார்கள்.
இதேபோல மத மாற்றங்கள் நடைபெறுவதைத் தடை செய்யவேண்டும். மதமாற்றங்களைஊக்குவிக்கும் அல்லது மதமாற்றத்தைச் செய்யும் கூட்டங்களும்,மாநாடுகளும் நிறுத்தப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவைச்சேர்ந்த ஏழை மக்களை பணத்தாசை காட்டி மதத்தை மாற்றும்செயல்கள் பரவலாக நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளன. இது நிறுத்தப்படவேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.