Published : 20 May 2018 06:32 PM
Last Updated : 20 May 2018 06:32 PM
கர்நாடக முதல்வராக பதவி ஏற்கும் முன், நாளை டெல்லி செல்லும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேச உள்ளார்.
கர்நாடக முதல்வராக பதவி ஏற்ற பாஜக தலைவர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியின் தலைவர் குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைத்தார். இதைத் தொடர்ந்து வரும் 23-ம்தேதி குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
அதற்கு முன்னதாக நாளை டெல்லி செல்லும் முதல்வர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேச உள்ளார்.
இது குறித்து பெங்களூரில் குமாரசாமி நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாளை டெல்லி செல்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்திக்க இருக்கிறேன். காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி சார்பில் எத்தனை பேர் அமைச்சர்களாக பதவி ஏற்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன். இதுவரை அமைச்சரவை குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சும் நடத்தவில்லை. அவ்வாறு வரும் தகவல்கள் போலியானவை. ஆட்சியைப் பகிர்ந்து கொள்வது குறித்து வரும் செய்திகளும் தவறானவை.
நான் முதல்வராகப் பதவிஏற்றால், 24 மணிநேரத்தில் ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன். புதன்கிழமை பதவியேற்பு விழாவும், அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சபாநாயகர் தேர்வும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறும்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT