Last Updated : 06 May, 2018 10:35 AM

 

Published : 06 May 2018 10:35 AM
Last Updated : 06 May 2018 10:35 AM

ஜின்னா பட விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்: அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிப்பு

முகம்மது அலி ஜின்னா பட விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

அலிகர் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் ஏப்ரல் 30-ல் அலிகர் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரீக் மன்சூருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “பல்கலை.யில் முகம்மது அலி ஜின்னா படம் இருப்பதாக அறிந்தேன். இது உண்மையா?” எனக் கேட்டிருந்தார். பல்கலை மாணவர் பேரவையின் வாழ்நாள் உறுப்பினராக ஜின்னா 1938-ல் நியமிக்கப்பட்டது முதல் அவரது படம் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் இந்தியப் பிரிவினைக்கு காரணமான ஜின்னாவின் படத்தை அகற்ற வேண்டும் என கவுதம் வலியுறுத்தினார்.

ஆனால் மாணவர் பேரவையின் உரிமையில் தலையிட முடியாது என பல்கலை நிர்வாகம் கைவிரித்தது. இதையடுத்து கடந்த 2-ம் தேதி மாணவர் பேரவையில் உரையாற்ற முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியை அழைத்திருந்தனர்.

அதற்கு முன்னதாக இந்துத்துவா அமைப்பினர் 7 பேர் பல்கலைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாவலர்கள் தடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் மேலும் 50 பேர் பல்கலை முன்பு ஜின்னாவின் கொடும்பாவியை எரித்தனர். இதில் அவர்களுக்கும் பல்கலை மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால், பல்கலை.யில் ஹமீது அன்சாரி பேசவிருந்த நிகழ்ச்சி ரத்தானது.

இதனிடையே, 7 பேரும் விடுவிக்கப்பட்டதாக அறிந்த மாணவர் பேரவை நிர்வாகிகள் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இதில் பேரவையின் தலைவர், செயலாளர், முன்னாள் தலைவர் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அலிகரில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் நீதி விசாரணை கோரி மாணவர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு அலிகர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனினும், அலிகர் பல்கலை மாணவர் பேரவையினர், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத் வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x