Published : 09 Aug 2014 10:41 AM
Last Updated : 09 Aug 2014 10:41 AM

காவிரி நதி நீர் பங்கீடு வழக்கை விசாரிக்க 2 நீதிபதிகள் மறுப்பு

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் மறுத்து விட்டதையடுத்து, இவ்வழக்கை வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்களை விசாரிக்க உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “கேரள அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்தபோது, அம்மாநிலம் சார்பில் நதி நீர் தாவா வழக்குகளில் நீதிபதி குரியன் ஜோசப் ஆஜராகி உள்ளார். நீதிபதி ரோஹின்டன் நரிமன் கர்நாடகாவுக்கு ஆதரவாக நடுவர் மன்றத்தில் ஆஜராகி உள்ளார். எனவே, இந்த வழக்கை இவர்கள் அடங்கிய அமர்வு விசாரிக்க கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.

தமிழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி, “இரு நீதிபதிகளும் இந்த வழக்கை விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை” என்று தெரிவித்தார். ஆனால், இந்த வழக்கிலிருந்து தாங்கள் விலக விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தலைமை நீதிபதியிடம் இதுகுறித்து ஏற்கெனவே தெரிவித்துள்ளதாகவும் கூறிய அவர்கள், வழக்கிலிருந்து விலகிக் கொண்டனர். இதையடுத்து, இந்த வழக்கு வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x