Published : 22 Aug 2014 11:11 AM
Last Updated : 22 Aug 2014 11:11 AM

இரோம் ஷர்மிளா மீண்டும் கைது: தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு

மணிப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட இரோம் ஷர்மிளாவை போலீஸார் மீண்டும் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 309-ன் கீழ் தற்கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப் படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெறக்கோரி 2000-ம் ஆண்டு முதல் ஷர்மிளா உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் வலுக்கட்டாயமாக உணவு அளித்து வந்தனர். அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறும் அறையையே சிறையாக மாற்றினர்.

பல ஆண்டுகளாக சிறையில் இருந்த அவரை விடுதலை செய்ய மணிப்பூர் மாவட்ட நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறிய அவர் வீட்டிறுக்குச் செல்லாமல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

தனது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், இந்த முறை தனக்கு கட்டாயமாக உணவு அளிக்க அனுமதிக்கப்போவதில்லை எனவும் கூறியிருந்தார்.

அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டார் இரோம் ஷர்மிளா. இந்நிலையில் இன்று காலை உண்ணாவிரப் பந்தலுக்குள் நுழைந்த 30-க்கும் மேற்பட்ட பெண் போலீஸார், இரோம் ஷர்மிளாவை மருத்துவப் பரிசோதனைக்கு கொண்டு செல்வதாகக் கூறி அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி சந்தோஷ் கூறுகையில்: இரோம் ஷர்மிளா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x