

பாட்னா: பிஹாரில் முந்தைய மகாபந்தன் கூட்டணி அரசு மூலம் வழங்கப்பட்ட ரூ.826 கோடி மதிப்பிலான 350 ஒப்பந்தங்களை தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து பொது சுகாதார பொறியியல் துறை (பிஎச்இடி) அமைச்சர் நீரஜ் குமார் சிங் கூறியதாவது: மாநிலத்தில் முந்தைய ஆர்ஜேடி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி ஆட்சியின்போது பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. அதில் ரூ.826 கோடி மதிப்பிலான 350 ஒப்பந்தங்களை வழங்குவதில் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது துறை ரீதியாக நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இவை, கிராமப்புறநீர் விநியோகத்துடன் சம்பந்தப்பட்டவையாகும். இதில், கை பம்புகள் அமைத்தல் மற்றும் சிறிய நீர் விநியோக கட்டமைப்புகளை உருவாக்குதலும் அடங்கும்.
இந்தப் பணிகளை நிறைவேற்ற ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதையடுத்தே, ஒப்பந்தங்களை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணைக்காக முதல்கட்ட விசாரணைஅறிக்கை மாநில அரசின் உரியஅதிகாரியிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. இவ்வாறு நீரஜ் குமார் சிங் தெரிவித்தார்.