ஜூன் 27-ல் கூட்டு கூட்டம்: குடியரசு தலைவர் முர்மு உரையாற்றுகிறார்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் ஜூன் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். மக்களவை தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

18-வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி, புதிய எம்.பி.க்கள் பதவியேற்புக்காக மக்களவையின் தற்காலிக தலைவராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மக்களவை தலைவர் தேர்தல் நாளை (ஜூன் 26) நடைபெறுகிறது. இத்துடன் தற்காலிக மக்களவை தலைவர் பதவி காலாவதியாகிவிடும். இதற்கிடையே, 264-வது மாநிலங்களவை கூட்டத் தொடர் 27-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடப்பு நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in