Published : 28 May 2018 08:15 AM
Last Updated : 28 May 2018 08:15 AM

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 24 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 24 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார். “இந்த திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயார். ஆனால் அதற்கு காலஅவகாசம் தேவை, சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறியுள்ளார்.

இந்தப் பின்னணியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய சட்ட ஆணைய மூத்த அதிகாரிகளும் தலைமைத் தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகளும் கடந்த 16-ம் தேதி டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் தற்போது 10 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. சுமார் 10 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. 2 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 12 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கின்றன.

வரும் 2019-ம் ஆண்டில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் கூடுதலாக 12 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அதே எண்ணிக்கையில் விவிபாட் இயந்திரங்களும் தேவை. இவற்றை வாங்க ரூ.4,500 கோடி தேவைப்படும். ஒட்டுமொத்தமாக 24 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். 2024 மக்களவைத் தேர்தலின்போது ஏராளமான இயந்திரங்கள் காலாவதியாகிவிடும். அப்போது புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க ரூ.1,700 கோடி தேவைப்படும். இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x