Published : 27 May 2018 09:43 AM
Last Updated : 27 May 2018 09:43 AM

பால்கர் மக்களவைத் தொகுதியில் நாளை இடைத்தேர்தல்; எப்படியாவது வெற்றி பெற வேண்டும்- மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் ஆடியோவால் சர்ச்சை

மகாராஷ்டிராவின் பால்கர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அந்த மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். அவரது பேச்சு அடங்கிய ஆடியோவை சிவசேனா வெளியிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த 2014 முதல் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆரம்பம் முதலே பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் பால்கர் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. சிந்தாமன் வங்கா கடந்த ஜனவரி 30-ம் தேதி உயிரிழந்தார். அந்த தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் நேருக்கு நேர் மோதுகின்றன.

சிந்தாமன் வங்காவின் மகன் ஸ்ரீநிவாஸ் சிவசேனா சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேந்திர காவித் அண்மையில் பாஜகவில் இணைந்தார். அவர் பால்கர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இந்தப் பின்னணியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தொலைபேசி உரையாடல் ஆடியோவை சிவசேனா நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதில் பட்னாவிஸ் கூறியிருப்பதாவது: சிவசேனா நமது முதுகில் குத்திவிட்டது. இந்த நேரத்தில் பாஜகவினர் அமைதியாகக் இருக்கக்கூடாது. அவர்களை (சிவசேனா) திருப்பி தாக்க வேண்டும். இடைத்தேர்தலில் பாஜக எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அவர்களில் சிலர் (சிவசேனா) ரவுடிகளாக செயல்பட்டால் அதே ரவுடி பாணியில் நான் அவர்களை எதிர்கொள்வேன். உங்கள் (பாஜக) பின்னால் நான் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். இதனிடையே முதல்வர் பட்னாவில் தனது முழு உரையாடல் ஆடியோவை நேற்று வெளியிட்டார். “எனது உரையாடலை தங்களுக்கு சாதகமாக வெட்டி, ஒட்டி சிவசேனா வெளியிட்டுள்ளது. முழு ஆடியோவை நானே வெளியிட்டுள்ளேன். இந்த விவகாரத் தில் எதையும் சந்திக்கத் தயார்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x