Published : 22 May 2018 07:45 AM
Last Updated : 22 May 2018 07:45 AM

டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தார் குமாரசாமி: கர்நாடக அமைச்சரவை குறித்து ஆலோசனை

மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) மாநில தலைவரும் கர்நாடக முதல்வ ராக பொறுப்பேற்க உள்ளவருமான எச்.டி. குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவரும் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி தலைவருமான சோனியா காந்தியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சரவை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தர முன்வந்தது. இதன்படி, மஜத மாநில தலைவர் குமாரசாமி ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார்.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவும் உரிமை கோரினார். எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததால் அவர் முதல்வரானார். இதை எதிர்த்து காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிருபிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்பதால் எடியூரப்பா பதவி விலகினார்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவு பெற்ற மஜத மாநில தலைவர் குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து அவர் நாளை முதல்வராக பதவியேற்கிறார். இதனிடையே அமைச்சரவையை பங்கிடுவது தொடர் பாக இரு கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு துணை முதல்வர் பதவி வழங்க மஜத முடிவு செய்துள்ளது. அதேநேரம், 2 துணை முதல்வர் பதவி வேண்டும் என காங்கிரஸ் கேட்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் குமாரசாமி நேற்று டெல்லி சென்றார். அங்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை சந்தித்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் மற் றும் மஜத மூத்த தலைவர் டேனிஷ் அலி ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, அமைச்சரவையை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும் அமைச்சரவை தொடர்பாக ஆலோசனை நடத்த கே.சி.வேணுகோபாலுக்கு ராகுல் அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதன்படி, அவர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் மஜத தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “சோனியா, ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். அவர்கள் இருவரும் பங்கேற்க ஒப்புக் கொண்டனர். காங்கிரஸ், மஜத கூட்டணி நிலையானதாக இருக்கும். துணை முதல்வர் குறித்து முடிவெடுக்க கே.சி.வேணுகோபாலுக்கு ராகுல் அதிகாரம் வழங்கி உள்ளார்” என்றார்.

முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் நேற்று காலையில் ராகுல் காந்தியை சந்தித்தனர். அப் போது கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் எடுத்துக் கூறினர்.

நாளை பதவியேற்பு விழா

பதவி ஏற்பு விழா பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவை கட்டிட வளாகத்தில் நடைபெறுவதால் மேடை, அரங்கம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 11 ஆண்டுகளுக்கு பிறகு மஜத ஆட்சிக்கு வருவதால் அதன் தலைவர் தேவகவுடா இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவெடுத்துள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு குமாரசாமி ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நாடு முழுவதி லும் இருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள், 2 லட்சம் மஜத தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x