Published : 12 May 2018 08:00 AM
Last Updated : 12 May 2018 08:00 AM
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று நேபாளம் சென்றார்.
நேபாள பிரதமர் சர்மா ஒளி கடந்த ஏப்ரலில் இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது நேபாளத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று 2 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேபாளத்தின் ஜானக்பூருக்கு சென்றார். அங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய மோடியை அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஈஸ்வர் வரவேற்றார்.
பின்னர் ஜானக்பூரில் உள்ள ஜானகி கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். ஜானக்பூர் சீதை பிறந்த நகராக கருதப்படுகிறது. அங்கு அவருக்கு கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கு சென்ற மோடியை அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒளி வரவேற்றார். பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் இரு தலைவர்களும் பங்கேற்றனர்.
பின்னர் நடந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது: ஜானகி கோயிலுக்கு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. ஆன்மிக சுற்றுலாத் தலமாக நேபாளம் விளங்குகிறது. ஜானக்பூரின் வளர்ச்சிக்காக இந்தியா சார்பில் ரூ.100 கோடி வழங்கப்படும். நேபாளத்தின் வளர்ச்சிக்கு இந்தியா துணைநிற்கும்.
எப்போதெல்லாம் பிரச்சினைகள் எழுகிறதோ அப்போது இந்தியாவும் நேபாளமும் ஒன்றாக இணைந்து நிற்கும். இரு நாட்டு மக்களும் பரஸ்பரம் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளனர். நேபாளம் இல்லாமல் இந்தியாவின் ஆன்மிக நம்பிக்கை பூர்த்தி அடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியின்போது ஜானக்பூருக்கும் ராமர் பிறந்த நகரான அயோத்திக்கும் இடையே நேரடி பேருந்து போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
பின்னர் ஜானக்பூரில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு நேபாள பிரதமர் சர்மா ஒளியுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். நேபாள அதிபர் பிந்தியா தேவியையும் மோடி சந்தித்துப் பேசினார்.
நேபாளத்தின் முஸ்தாங் மாவட்டத்தில் இமயமலையில் அமைந்துள்ள முக்திநாத் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT