ஒடிசாவில் வெப்ப அலையால் 3 நாளில் 8 பேர் உயிரிழப்பு

ஒடிசாவில் வெப்ப அலையால் 3 நாளில் 8 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

புவனேஸ்வர்: நாடு முழுவதும் கோடைவெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒடிசாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 3 நாட்களில் 8 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு நேற்று முன்தினம் தெரிவித்தது.

இதுகுறித்து மாநில பேரிடர் நிவாரண மையம் மேலும் கூறுகையில், “ஒடிசாவில் இந்த ஆண்டுகோடையில் 159 பேரின் உயிரிழப்புக்கு வெப்ப அலை காரணமாகஇருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 41 பேர் இறப்புக்கு கோடை வெப்பமே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 72 பேரின் மரணத்திற்கு வெப்ப அலைதான் காரணமா என மாவட்ட அளவில் விசாரணையில் உள்ளது” என்று தெரிவித்தது.

ஒடிசா தலைவர் புவனேஸ்வரில் நேற்று முன்தினம் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. இந்த வாரம்முழுவதும் ஒடிசாவில் வெப்பநிலைவழக்கத்தை விட 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு கோடையில் இந்தியாவிலும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறான அதிக வெப்பத்தை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். மனிதனால் உந்தப்பட்ட பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் வரும் நாட்களில் தொடர்ந்து அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியின் சில இடங்களில் இம்மாதம் அதிகபட்ச வெப்ப நிலை 49.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in