ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜூன் 14-ல் இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜூன் 14-ல் இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

மாநாட்டை நடத்தும் இத்தாலி அரசு சார்பில் இந்தியா, சவுதிஅரேபியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் 14-ம் தேதி ஒரு நாள் பயணமாக இத்தாலி செல்கிறார்.

இந்த மாநாட்டில் உக்ரைன் போர், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி பொருளாதார வளர்ச்சி குறித்து ஜி7 உச்சி மாநாட்டில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in