

புதுடெல்லி: பிரதமர் மோடி, தனது தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளாத தலைவர் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவரான சோனியா காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இன்று பதவியேற்க உள்ள நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
“பிரதமர் மோடி தனது கட்சி மற்றும் கூட்டணியை புறந்தள்ளிவிட்டு ஆதரவு தேடினார். அதில் அவருக்கு தோல்வி தான் கிடைத்தது. அதற்கான தார்மிக பொறுப்பை அவர் ஏற்க வேண்டும். இதன் மூலம் தலைவர் என்ற தகுதியை அவர் இழந்துள்ளார்.
இருந்தாலும் அந்த பொறுப்பில் இருந்து அவரே தன்னை தொலை தூரமான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இதோ பதவியேற்க உள்ளார். அவர் தனது ஆளுமை பாணியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை.
இருந்தாலும் அதில் கவனமுடன் இருக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. கடந்த 2014 முதல் சுமார் 10 ஆண்டு காலம் இருந்தது போல அவர்களால் இயங்க முடியாது. அவர்களால் தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.15 மணி அளவில் நடைபெறும் விழாவில் நரேந்திர மோடி, 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.