Last Updated : 09 May, 2018 01:04 PM

 

Published : 09 May 2018 01:04 PM
Last Updated : 09 May 2018 01:04 PM

ஈரான் அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்? - 5 தாக்கங்கள்

 

ஈரானுடனான ஒருங்கிணைந்த செயல் திட்டத்திலிருந்து [Joint Comprehensive Plan of Action (JCPOA)]அமெரிக்கா விலகுவது என்பது உலக அளவில் சில சந்தை ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தவே செய்யும். ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது, ஆனால் அமெரிக்கா அதிலிருந்து விலக மட்டுமே முடியும், மற்ற நாடுகளான

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ரஷ்யா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டதாகவே உள்ளன.

 

அமெரிக்கா விலகுவதும், ஈரான் மீது  “அதிகபட்ச பொருளாதாரத் தடைகள்” ஏற்படுத்துவதும் இந்தியாவை பாதிக்கவே  செய்யும். அதன் தாக்கங்களைப் பார்ப்போம்:

 

1. கச்சா எண்ணெய் விலை:

அமெரிக்கா ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகினால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலைகளில் மாற்றம்  ஏற்பட வாய்ப்பு உண்டு. குறிப்பாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் 3வது பெரிய நாடு ஈரானாகும். (இந்தியா  கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இராக், சவுதி அரேபியா முதல் 2 பெரிய நாடுகளாகும்), இதனால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு அதற்கு கச்சா எண்ணெய் விலைகளில் ஈரான் இழப்பீடு தேடும் முடிவை எடுத்தால் அது  இந்தியாவை பெரிய அளவில் பாதிக்கும்.

 பெட்ரோல், டீசல் விலை உயரும் இதனால் பணவீக்க விகிதம் உயரும். இந்திய  ரூபாய் மதிப்பு சரியும்.  ஈரான் அதிபர் ரூஹானி பிப்ரவரியில் இந்தியா வந்து சென்ற பிறகு இந்தியா ஈரானிடமிருந்து அதிகமாக கச்சா எண்ணெய்  இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது 2018-19-ல் நாளொன்றுக்கு 396,000 பீப்பாய்களாக அதிகரிக்கும்.

இப்போது ஈரானிடமிருந்து நாளொன்றுக்கு 205000 பீப்பாய்கள் கச்சா வாங்கப்படுகிறது. ஈரானுடன் மொத்தம் 12.89 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய வர்த்தக உறவுகளை இந்தியா கொண்டுள்ளது, இதில் எண்ணெய் அல்லாத வர்த்தகம்  மட்டுமே ரூ.2.69 பில்லியன் டாலர்கள் பெறுமானம் ஆனது. இது பாதிக்காது. ஆனால் கச்சா விலை உயர்த்தினால் ஏற்கெனவே வானுயர வளர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் விலை இன்னும் உயரும் இது உயர்ந்தால் சங்கிலித் தொடராக அனைத்தும் உயரும், பணவீக்கம் அதிகரிக்கும் ரூபாய் மதிப்பு சரியும்.

2 சாபஹார் திட்டம்

ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவின் வர்த்தக உறவுகளுக்கு பாகிஸ்தான் போடும் முட்டுக்கட்டைகளை உடைத்தெறிய

இந்தியா சாபஹாரில் உள்ள ஷாஹித் பெஹெஷ்தி துறைமுகத்தில் தங்களது இருப்பை அதிகரிக்கச் செய்ய முயற்சி  செய்து வருகிறது. ஆகவே அமெரிக்கா தற்போது புதிய பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது திணித்தால், அது எவ்வளவு கண்டிப்பாக அமல் செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு இந்தியாவின் சாபஹார் திட்டமும் பாதிக்கப்படும்.

சாபஹார் வளர்ச்சிக்கு இந்தியா ஏற்கெனவே 85 மில்லியன் டாலர்கள் கமிட் ஆகியுள்ளது. மேலும் துறைமுகத்திற்கென்றே மேலும் 500 மில்லியன் டாலர்கள் செலவுத்திட்டம் வைத்துள்ளது இந்தியா. காரணம் ஆப்கானிஸ்தானுக்கு ரயில்வே பாதை அமைப்பது 1.6 பில்லியன் டாலர்கள் திட்டமாகும். ஆகவேதான் சாபஹார் துறைமுக வளர்ச்சியில் இந்தியா செலவு  செய்கிறது.

கடந்த ஆண்டு சாபஹார் வழியாக 1.1 மில்லியன் டன்கள் கோதுமை அனுப்ப அமெரிக்கா சலுகை காட்டியது.  ஆனால் தற்போது டில்லர்சனுக்குப் பிறகு வந்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்ட்டன் ஈரான் மீது  மிகவும் கடுமை காட்டுபவர், ஆகவே ஈரான் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சாபஹார் திட்டத்தையே குலைக்கும்  விதமாகக் கூட அமையலாம்.

3.பன்னாட்டு வடக்கு தெற்கு போக்குவரத்து இடைவழி (INSTC):

சாபஹார் திட்டம் போலவே, இந்தியாவின் இன்னொரு திட்டம்தான் பன்னாட்டு வடக்கு தெற்கு போக்குவரத்து வர்த்தக இடைவழியாகும். 2002இல் இதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இது ஈரானிலிருந்து தொடங்கி மத்திய ஆசியாவை குறுக்கிட்டு க் கடந்து ரஷ்யா வரை நீளும் 7,200கிமீ இரட்டை வழி பொருளாதார, வர்த்தக வலைப்பின்னலாகும். இதன் மூலம் வர்த்தகம் விரைவடையும்.

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இந்த ஒப்பந்தம் வேகம்பிடித்தது. இப்போது ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகி அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தால் இந்த வலைப்பின்னலில் உள்ள நாடுகள் வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்களும் அமெரிக்க கெடுபிடிக்குக் கட்டுப்பட்டாக வேண்டும். இதனால் ஈரானுடனான வர்த்தகம் இந்தியாவுக்கு பாதிக்கும்.

4.ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு:

கடந்த ஆண்டுதான் ஷாங்காய் கூட்டுறவு ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுடன் இந்தியாவும் இணைந்தது. பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு உச்சிமாநாட்டுக்குக் கலந்து கொள்ளச் சென்றபோதுதான் இந்தியா அதில் இணைந்தது. ஐரோப்பிய ஆசிய கூட்டுப்பாதுகாப்பு முயற்சியில் ஈரானையும் சீனா சேர்க்க பரிசீலித்து வருகிறது.

இந்த முன்மொழிவு சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ‘அமெரிக்காவுக்கு எதிரான’ அமைப்பில் இந்தியாவும் இணைந்துள்ளதாகப் பார்க்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இந்தோ-பசிபிக் நாற்தரப்பு ஒப்பந்த முயற்சி, அதாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவற்றுடன் இணையும் வாய்ப்பு பிரச்சினைக்குள்ளாகும்.

மேலும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் இந்தியா இணைவது இந்த ஒப்பந்த விலகலுக்குப் பிறகு ஈரானின் மற்ற வைரிகளான சவுதி அரேபியா, யு.ஏ.இ. இஸ்ரேல் ஆகியவற்றுடனும் இந்தியா கொண்டுள்ள வர்த்தக உறவுகளைப் பாதிக்கும்.

5.விதிகள் அடிப்படை ஒழுங்கு:

பலதரப்பு கருத்தொற்றுமையை வலியுறுத்தும் சர்வதேச அரங்கில் நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டும் இருக்க வேண்டிய விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கு என்பதை இந்தியா நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது.

தற்போது ஈரான் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதால் இது போன்ற ஒப்பந்தங்களையும் அமெரிக்கா மதிக்காமல் புறக்கணிக்க வாய்ப்புள்ளது. இதனாலும் அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள இருதரப்பு, பலதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் சிக்கலுக்குள்ளாகும்.

இந்தியா ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ள பருவநிலை மாற்ற பாரீஸ் ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஒப்பந்தங்களை அமெரிக்கா ஏற்காத நிலையில் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே இந்தியா அமெரிக்காவுடனான தன் ஒப்பந்தங்களில், உறவுகளில் புதிய புரிதலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏதோ ஒப்பந்தம், எங்கோ யாரோ கையெழுத்திடுகிறார்கள், அதனால் நமக்கு என்ன பாதிப்பு என்று மக்கள் திரளில் பலர் நினைக்கலாம் ஆனால் அனைத்தும் ஒன்றையொன்று இணைக்கும், பாதிக்கும் வலைப்பின்னல் என்பதை இந்த ஒப்பந்த விவகாரங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x