Published : 05 May 2018 07:44 AM
Last Updated : 05 May 2018 07:44 AM
பெங்களூரு‘‘பிரதமர் மோடி இயல்பாக பொய் பேசுகிறார். குப்பை நகரம் என்று கூறி பெங்களூரு நகரை அவமானப்படுத்தி உள்ளார்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
கர்நாடக தேர்தலை முன்னிட்டு பெங்களூரு புறநகர் பகுதியான கெங்கேரி பகுதியில் கடந்த வியாழக்கிழமை பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று போற்றப்படும் பெங்களூருவை, ‘சின்’ (பாவ) பள்ளத்தாக்காக ஆக்கிவிட்டார் முதல்வர் சித்தராமையா. பெங்களூருவை குற்றங்களின் தலைநகரமாக்கிவிட்டார்.
பெங்களூருவை பூங்கா நகரம் என்று உலகளவில் விரும்புகின்றனர். ஆனால், இந்த நகரை ‘குப்பை நகரமாக்கி’ விட்டது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு. இங்கு அடிப்படை வசதிகளைப் பற்றி முதல்வர் சித்தராமையா கவலைப்படவில்லை’’ என்று குற்றம் சாட்டினார்.
இதற்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் சரமாரியாக பதில் அளித்துள்ளார். அதில், கர்நாடக மாநில நகர்ப்புறங்களை மேம்படுத்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செலவிட்ட நிதியின் அளவு, தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு செலவிட்ட நிதியின் அளவு போன்ற புள்ளிவிவரங்களை ட்விட்டரில் வெளியிட்டு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பதில் அளித்து ராகுல் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி இயல்பாகவே பொய் பேசுபவராக இருக்கிறார். குப்பை நகரம் என்று மோடி கூறியதன் மூலம் பெங்களூருவை அவர் அவமானப்படுத்தி இருக்கிறார். பொய்களை கட்டமைப்பது உங்களுக்கு இயல்பாகவே வருகிறது. ஆனால், நகரங்களைக் கட்டமைப்பதுதான் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. இதை புள்ளிவிவரங்களே எடுத்துக் காட்டும்.
கர்நாடக நகர்ப்புற மேம்பாட்டுக்கு மத்தியில் உள்ள பாஜக அரசை விட, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது 1,100 சதவீதம் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக நகர்ப்புற மேம்பாட்டுக்கு செலவிட்ட தொகை ரூ.6,570 கோடி. ஆனால், பாஜக செலவிட்ட தொகை ரூ.598 கோடி.
இவ்வாறு ட்விட்டரில் ராகுல் தெரிவித்துள்ளார். - ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT