Published : 11 May 2018 08:10 AM
Last Updated : 11 May 2018 08:10 AM
நேபாள பிரதமரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்த நாட்டுக்குச் செல்கிறார். இதை முன்னிட்டு மோடி கூறும்போது, ‘‘நேபாளத்துடனான நட்புறவுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்று உறுதி அளித்துள்ளார்.
நேபாள பிரதமராக கே.பி.சர்மா ஒளி கடந்த பிப்ரவரி மாதம் பதவியேற்றார். அதன்பிறகு முதன்முறையாக இந்தியாவுக்குக் கடந்த மாதம் வந்தார். அப்போது பிரதமர் மோடியைச் சந்தித்து நேபாள - இந்திய உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நேபாளத்துக்கு வரவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஒளி அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, இன்று நேபாளத்துக்கு 2 நாள் பயணமாக செல்கிறார். இதை முன்னிட்டு மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேபாளத்துடனான இந்திய உறவு மிகவும் பழமையானதும் மிக நெருக்கமானதாகவும் இருந்து வருகிறது. நான் பிரதமராகப் பதவியேற்ற பிறகு இதுவரை 2 முறை நேபாளத்துக்கு சென்றுள்ளேன். தற்போது மேற்கொள்ளும் பயணம் 3-வதாக உள்ளது. இதுவே நேபாளத்துக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிப்பதை எடுத்துக் காட்டும்.
அண்டை நாடுகளுக்குதான் முதல் முன்னுரிமை என்ற கொள்கையை எனது தலைமையிலான மத்திய அரசு கடைபிடிக்கிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளும் இணைந்து பல்வேறு திட்டங்களை முடித்து காட்டியுள்ளன. இரு நாட்டு மக்களும் பலனடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
என்னுடைய நேபாள பயணம் அந்நாட்டுடனான உறவை இன்னும் வலிமைப்படுத்தும் என்று நம்புகிறன்.
இவ்வாறு மோடி கூறினார்.
பிரதமர் மோடி பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து நேரடியாக விமானத்தில் இன்று ஜானக்பூர் செல்கிறார். அங்குள்ள ராம் ஜானகி கோயிலில் பிரதமர் மோடியை நேபாள பிரதமர் சர்மா ஒளி வரவேற்கிறார். கோயிலில் மோடி சிறப்பு பூஜைகள் செய்கிறார். அதன்பின் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். பின்னர் முக்திநாத் கோயிலில் வழிபாடு செய்கிறார். அதன்பிறகு தலைநகர் காத்மாண்டு செல்கிறார். - ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT