Published : 06 May 2018 10:41 AM
Last Updated : 06 May 2018 10:41 AM
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் குஜராத் எம்எல்ஏ-வும், தலித் செயற்பாட்டளருமான ஜிக்னேஷ் மேவானி, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை சிக்மகளூருவில் நடந்த ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்’ என்ற கருத்தரங்கில் ஜிக்னேஷ் மேவானி மற்றும் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பாஜகவுக்கு எதிராக பேசினர். பிரதமர் மோடியையும் இந்துத்துவ அமைப்புகளையும் கடுமையாக விமர்சித்தனர். இதனால் கோபமடைந்த சிக்மகளூரு பாஜக பிரமுகர் சஞ்சீவ் ஷெட்டி, தேர்தல் கண்காணிப்பாளர் துஷார் மணியிடம் ஜிக்னேஷ் மேவானி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக புகார் அளித்தார்.
இது தொடர்பாக துஷார் மணி, சிக்மகளூரு காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலையிடம் விசாரித்தார். அப்போது அண்ணாமலை, “மேவானி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்துக்கு முதலில் அனுமதி அளிக்கப்பட்டது. உள்ளூர் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் சட்டத்தை மீறி, மேவானி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்” என்றார். இதையடுத்து துஷார் மணி உத்தரவின்படி மேவானி, பிரகாஷ் ராஜ் உட்பட 13 பேர் மீது ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தியது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்க முற்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 5 பிரிவுகளின் (இந்திய தண்டனை சட்டம் 143, 147, 341, 188 மற்றும் 149) கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT