Published : 06 Apr 2018 08:18 AM
Last Updated : 06 Apr 2018 08:18 AM
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் செயல்திட்டத்தை (ஸ்கீம்) மத்திய அரசு 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு மார்ச் 29-ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், ‘ஸ்கீம் என்பதன் பொருள் காவிரி மேலாண்மை வாரியமா?’ என்று உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தின. தமிழகத்தைக் கண்டித்து கர்நாடகாவிலும் கன்னட அமைப்புகள் எல்லை அடைப்பு போராட்டம் நடத்தின. இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டங்களின் மூலம் தமிழக அரசியல்வாதிகளும், விவசாயிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தின் அழுத்தத்துக்கு மத்திய அரசு பணிய கூடாது.
‘ஸ்கீம்’ என்பதன் பொருள் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என அண்மையில் உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடக மாநிலத்தின் உரிமை பறிபோகும். எனவே அதனை கர்நாடக அரசு ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT