Published : 04 Jun 2024 06:28 AM
Last Updated : 04 Jun 2024 06:28 AM

இந்திய கடற்கரை நகரங்களுக்கு வருமாறு இஸ்ரேல் தூதரகம் அழைப்பு

புதுடெல்லி: மாலத்தீவுகளுக்கு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மக்கள் வருவதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்திய கடற்கரை நகரங்களுக்கு வருமாறு அந்நாட்டு மக்களிடம் இந்தியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேல் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மாலத்தீவுகளுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்தஅமைச்சர் அலி இசான் அண்மையில் அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள கடற்கரை நகரங்களுக்கு சுற்றுலா வருமாறு இந்தியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் லட்சத்தீவுகள், கேரளாவிலுள்ள கடற்கரை நகரங்கள், கோவா, அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு இஸ்ரேல் நாட்டு மக்கள் சுற்றுலாவுக்கு வரலாம்என்றும் இஸ்ரேல் தூதரகம் அழைப்புவிடுத்துள்ளது.

மேலும் தனது சமூக வலைதளங்களிலும் அந்தமான் கடற்கரை, லட்சத்தீவு கடற்கரை, கேரள நகரங்கள் புகைப்படங்களை வெளியிட்டு இஸ்ரேல் தூதரகம் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மும்பையிலுள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டுத் தூதர் கொப்பி ஷோஷானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:

மாலத்தீவுகள் இனி இஸ்ரேல் நாட்டவரை வரவேற்கவில்லை என்பதால், இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளை அன்புடன் வரவேற்கும்விதமான, மிகுந்த விருந்தோம்பலுடன் உபசரிக்கும் விதமான சில அழகான மற்றும் அற்புதமான இந்திய கடற்கரைகள் இங்கே உள்ளன.

இஸ்ரேல் நாட்டு தூதரக அதிகாரிகள் இந்த இடங்களை பார்வையிட்டு தந்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த இடங்களின் புகைப்படங்களை இங்கு பதிவு செய்துள்ளோம்.

இஸ்ரேல் நாட்டு மக்கள் லட்சத்தீவு, கோவா உள்ளிட்ட அழகிய கடற்கரை நகரங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டு இயற்கையின் அனுபவத்தைப் பெறலாம்.

மாலத்தீவுகள் அரசின் முடிவுக்குஎங்களது நன்றி. இனி இஸ்ரேல் நாட்டு மக்கள் இந்தியாவிலுள்ள லட்சத்தீவுகளின் அழகிய கடற்கரைகளை கண்டு மகிழலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

ஏற்கெனவே பிரதமர் மோடிலட்சத்தீவுகளுக்கு சென்றிருந்தபோது அதன் அழகிய கடற்கரை படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மாலத்தீவுகளுக்கு அதிக அளவில் சுற்றுலா சென்று கொண்டிருந்த நாட்டு மக்கள் அதைத் தவிர்த்தனர். தற்போது நமது நாட்டைச் சேர்ந்த மக்கள், லட்சத்தீவுகளுக்கு அதிக அளவில் சுற்றுலா செல்லத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x