Published : 04 Jun 2024 06:47 AM
Last Updated : 04 Jun 2024 06:47 AM

நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்து தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தவர் மயங்கி விழுந்தார்: மருத்துவர் விளக்கம்

கோப்புப் படம்

ஹைதராபாத்: தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த 53 வயது நபர் ஒருவர் சிரிப்பை அடக்க முடியாமல் திடீரென மயங்கி கீழே விழுந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ என்றும், 'மனதார சிரிப்பவர்களின் ஆயுள் நீடிக்கும்' என்றும் பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால், ஹைதராபாத்தை சேர்ந்த ஷியாம் (53) என்பவர், தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்து விழுந்து, விழுந்து சிரித்துள்ளார். அப்போது சிரிப்பை அடக்க முடியாமல் மயங்கமடைந்து விழுந்துள்ளார்.

உடனே அவரை, அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு பிறகு, அவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வீடியோவும், தகவலும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதிகம் சிரிப்பவர்கள் மயங்கி விழுவார்களா, அது அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்குமா என்பது போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

என்ன காரணம்..? ஷியாமுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை. மேலும், அவர் எவ்விதமாத்திரைகளையோ, மருந்துகளையோ உபயோகிப்பதும் இல்லை. அப்படி இருக்கையில், அவருக்கு திடீரென மயக்கம் வந்தது எப்படி எனும் கேள்வி எழுந்துள்ளது.

முதலில் ஷியாமை அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பரிசோதித்தனர். பிறகு இவரின் இதயத்தை பரிசோதித்த டாக்டர் சுதிரகுமார், ஷியாமுக்கு சிரிப்பால்தூண்டப்பட்ட மயக்கம், அதாவதுlaughter - induced syncope ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தார்.

இதன்படி, அதிகமாக சிரிப்பு வரும் போது அல்லது தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் தன்னை மறந்து, சிரிப்பால் தூண்டப்பட்டு, மயக்க நிலைக்கு செல்வார்கள். அந்த சமயத்தில் அவரது ரத்த அழுத்தமும் குறைந்து விடும். ஆதலால், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. அப்போது அவர் மயக்கத்துக்கு ஆளாகிறார் என்பதே டாக்டரின் விளக்கம் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x