“Exit polls போலி; ஜூன் 4ம் தேதி பாஜக வெற்றி பெறாது” - சரணடைவதற்கு முன்பு கேஜ்ரிவால் பேச்சு

“Exit polls போலி; ஜூன் 4ம் தேதி பாஜக வெற்றி பெறாது” - சரணடைவதற்கு முன்பு கேஜ்ரிவால் பேச்சு
Updated on
2 min read

புதுடெல்லி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று தெரிவித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போலியானவை, ஜூன் 4ம் தேதி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் நிறைவடைந்த நிலையில் கேஜ்ரிவால் திஹார் சிறையில் இன்று சரணடைந்தார். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "டெல்லி மக்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய மகன் இன்று மீண்டும் சிறையில் சரணடையப்போகிறேன். நான் ஊழலில் ஈடுபட்டதன் காரணமாக சிறையில் அடைக்கப்படவில்லை. சர்வாதிகாரத்துக்கு எதிராக நான் குரல் எழுப்பியதால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார். அவர்கள் 500க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் அவர்கள் ஒரு ரூபாயைக்கூட கண்டுபிடிக்கவில்லை.

இந்தக் கருத்துக்கணிப்புகள் எல்லாம் போலியானவை. ஒரு கருத்துக்கணிப்பு ராஜஸ்தானில் பாஜக 33 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் மாநிலத்தின் மொத்த மக்களவைத் தொகுதியின் எண்ணிக்கையே 25 தான். இப்போதுள்ள முக்கியமான பிரச்சினையே, வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அவர்கள் ஏன் இவ்வாறு போலியான கருத்துக்கணிப்பை நடத்தினார்கள்? இது தொடர்பாக பல தியரிகள் உள்ளன. அவற்றில் ஒன்று, அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முயற்சிக்கிறார்கள்." இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

மீண்டும் சரண்: டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் கைது செய்தது. அவர் திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இதனிடையே தனது கைது நடவடிக்கையை எதிர்த்து கேஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் பொருட்டு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

கேஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் ஜூன் 1ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து அவர் இன்று திஹார் சிறையில் சரணடைந்தார். அதற்காக அவர் இன்று தனது வீட்டில் இருந்து 3 மணிக்கு கிளம்பினார். ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கும், கன்னோட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயிலுக்கும் கேஜ்ரிவால் சென்றார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு: முன்னதாக, மருத்துவக் காரணங்களுக்காக தனது இடைக்கால ஜாமீனை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றதில் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவினை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்தது. அதனைத் தொடர்ந்து கேஜ்ரிவால் சாதாரண ஜாமீன் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஜூன் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதனிடையே, சனிக்கிழமை நடந்த இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக, தனது வீட்டில் ஆம் ஆத்மி கட்சி அரசியல் விவகாரக் குழு கூட்டத்தினை கேஜ்ரிவால் நடத்தினார். அப்போது, அவர் இல்லாத சமயத்தில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

டெல்லி மக்களவைத் தொகுதிகள் அனைத்திலும் மீண்டும் பாஜக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தையகருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்படிருக்கும் நிலையில் இந்தக் கூட்டம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in