

உத்தராகண்டில் வியாழன் இரவு பெய்த கனமழைக்கு 17 பேர் பலியாகியுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன. கனமழை காரணமாக 250 பேரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் வியாழன் இரவு பெய்யத் தொடங்கிய கனமழை வெள்ளி பகல் வரை நீண்டது. இதன் காரணமாக, யம்கேஷ்வர் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன. இதில் 12 பேர் பலியாயினர். மேலும் 5 பேர் கல்ஜிகல் மற்றும் த்வரிகல் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பலியாயினர்.
தவிர, ரிஷிகேஷ் அருகே கங்கை ஆற்றில் அபாய அளவுக்குச் சற்றே குறைவாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையை ஒட்டி உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கனமழை பெய்வதால் பவுரி மாவட்டத்தில் உள்ள புராலா பைராகர் கிராமத்தில் 250 பேர் சிக்கியுள்ளனர். சாலைகள் சேத மடைந்திருப்பதால் அவர் களைப் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களை மீட்க டேராடூனில் இருந்து விமானங்களை அனுப்பக் கேட்டுள்ளது மாவட்ட நிர்வாகம். எனினும், வானிலை மோசமடைந்திருப்பதால் டேராடூனில் இருந்து விமானங்களை அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.