Published : 08 Apr 2018 09:17 AM
Last Updated : 08 Apr 2018 09:17 AM

அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி ஹைதராபாத்தில் கைது

தெலுங்கு திரையுலக பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி நேற்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

தெலுங்கு சின்னத்திரை தொகுப்பாளரும் நடிகையுமான ஸ்ரீரெட்டி தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இவர், தனக்கு சினிமா வாய்ப்பு வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி சில திரைப்பட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஏமாற்றி விட்டார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதுபோல ஏமாற்றியவர்கள் சிலரின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். மேலும் பலரது புகைப்படங்களை விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என கூறினார்.

இதனிடையே, பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் தலைவர் பவன் கல்யாண் ஹைதராபாத் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தார். இதன் பேரில், ஸ்ரீரெட்டி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக வலைத்தளங்கள் மூலம் ஸ்ரீரெட்டி கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால், தான் தெலுங்கு பிலிம் சேம்பர் முன்பு நிர்வாண போராட்டம் நடத்துவேன் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சேம்பர் பகுதிக்கு நேற்று மதியம் திடீரென வந்த ஸ்ரீரெட்டி, அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜூப்ளி ஹில்ஸ் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, ஸ்ரீ ரெட்டியை கைது செய்தனர். பின்னர் அங்கு அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளித்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x