

முஜ்ரா நடனம் என்று பிஹார் மாநில மக்களை பிரதமர் நரேந்திர மோடி அவமதித்துவிட்டார் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் பிஹாருக்கு வந்த பிரதமர் மோடி பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, “சமூக நீதிக்கான போராட்டத்தில் புதிய வழிகாட்டுதல்களை வழங்கிய பூமிதான் பிஹார் மாநிலம். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் உரிமைகளை பறித்து இஸ்லாமியர்களுக்கு திசை திருப்பும் இண்டியா கூட்டணியின் திட்டங்களை நான் முறியடிப்பேன் என்பதை அதன் மண்ணில் அறிவிப்பதற்கு விரும்புகிறேன். அவர்கள் அடிமைகளாக இருந்து கொண்டு தங்களது வாக்கு வங்கியை திருப்திபடுத்துவதற்காக அழகிகள் போல் முஜ்ரா நடனம் ஆடுகின்றனர் என்று பேசினார்.
முஜ்ரா என்பது ஒரு வகையான கவர்ச்சியான நடனமாகும். இது முகலாய ஆட்சியின்போது தோன்றிய நடன வகையாகும். அந்தக் காலத்தில் நவாப்கள், பிரபுக்கள் மற்றும் இந்திய சமுதாயத்தின் உள்ளூர் ஆட்சியாளர்கள் தங்களது பொழுதுபோக்குக்காக பெண்களை பயன்படுத்தினர். அப்படி பெண்கள் ஆடும் அந்தரங்க கவர்ச்சி நடனம்தான் முஜ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முஜ்ரா நடனமாடுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியதற்கு, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் நேற்று நடைபெற்ற நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு கார்கே பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.நாங்கள் பாகிஸ்தானுடன் போரிட்டு வங்கதேசத்துக்கு சுதந்திரம் பெற்று தந்தோம்.
சீனா இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளையும், சாலைகளையும் கட்டிவருகிறது. ஆனால், இந்த விஷயங்களில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். இந்த தேர்தல்பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல்.
ராகுலுக்கும், மோடிக்குமான தேர்தல் அல்ல.பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பிஹாரை அவமதித்து விட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம், அதிகமாக பிஹாரில்தான் ஆடப்படுகிறது. இதனால் அவர் பிஹாரையும், அதன் வாக்காளர்களையும் அவமதிப்பு செய்து விட்டார்.
பிரதமர் எதேச்சதிகாரத்துடன் செயல்படுகிறார். அவரது எண்ணம் தவறானது. பிரதமர் ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார். அவர் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், மக்கள்எதையும் பேசுவதற்கு அனுமதிக்கமாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.