Published : 26 May 2024 06:16 PM
Last Updated : 26 May 2024 06:16 PM

தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதி இல்லை: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்

புதுடெல்லி: தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே, அதற்கான உரிமங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரையில், “உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 விதிகளின் கீழ் தாய்ப்பாலை பதப்படுத்துதல் அல்லது விற்பனை செய்ய அனுமதியில்லை. எனவே, தாய்ப்பால் மற்றும் அதுதொடர்புடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். விதிகளை மீறினால் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தாய்ப்பாலை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள உணவு வணிகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிமம் வழங்கக்கூடாது. இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

பொதுச் சுகாதார பாலூட்டும் மையங்கள் (LMC) வழிகாட்டுதல்களின்படி, தாய்ப்பாலை எந்தவொரு வணிக நோக்கத்துக்கும் பயன்படுத்த முடியாது. சிசுக்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் உட்பட ஆன்லைன் மூலம் தாய்ப்பால் விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருவதாக சமீபகாலமாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இப்படியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x