கேரளாவில் உடல் உறுப்புக்காக ஆள்கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது

கேரளாவில் உடல் உறுப்புக்காக ஆள்கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது
Updated on
1 min read

திருவனந்தபுரம்: சர்வதேச அளவில் மனித உறுப்புகளை விற்கும் கும்பலை சேர்ந்த கேரள இளைஞர் சபித் நாசர் (30) நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபித் நாசர். இவர், கேரளாவை சேர்ந்த பின்தங்கிய மக்களை ஏமாற்றி வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருந்து சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் மட்டும் கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 பேரை அவர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஈரான்நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் சிறுநீரகங்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு உள்ளன.

சபித் நாசரால் ஏமாற்றப்பட்ட பாலக்காட்டை சேர்ந்த ஒருவர் கேரள போலீஸில் அண்மையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக அவரை கேரள போலீஸார் தேடி வந்தனர். இந்த சூழலில் ஈரானில் இருந்து குவைத் வழியாக நேற்று முன்தினம் கொச்சி விமான நிலையத்துக்கு சபித் நாசர் வந்தார். அவரை விமான நிலையத்தில் கேரள போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து கேரள போலீஸார்கூறும்போது, “சர்வதேச கும்பலுடன் சபித் நாசருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம். கேரளாவில் இருந்து ஏழை மக்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அவர்களின் உடல் உறுப்புகளை நாசர் விற்பனை செய்துள்ளார்.

மத்திய புலனாய்வு அமைப்பு: இதற்கு பெரும் தொகையை பெற்றுக் கொண்டு உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்களுக்கு சொற்ப தொகையை வழங்கி வந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்த உள்ளன’’ என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in