Last Updated : 24 Apr, 2018 12:15 PM

 

Published : 24 Apr 2018 12:15 PM
Last Updated : 24 Apr 2018 12:15 PM

கட்சிரோலி என்கவுன்ட்டர்: மஹாராஷ்டிரா ஆற்றில் 11 மாவோயிஸ்ட்கள் உடல் கண்டெடுப்பு;பலி 33 ஆக அதிகரிப்பு

மஹாராஷ்டிரா, சட்டீஸ்கர் மாநில எல்லைப்பகுதியில் கடந்த ஞாயிற்றிகிழமை மஹாராஷ்டிரா போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டனையில் ஏற்கனவே 16 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அங்குள்ள இந்திராவதி ஆற்றில் இன்று அதிகாலை மேலும் 11 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.

மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் எல்லைப்பகுதியில் உள்ள கட்சிரோலி மலைப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக மஹாராஷ்டிரா அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கட்சிரோலி வனப்பகுதிகள், அங்கிருந்த கிராமங்களில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, மலைப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள், அதிரடிப்படையினரைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அதிரடிப்படையினரும் சுட்டனர். இருதரப்புக்கும் நடந்த பலத்த துப்பாக்கிச் சண்டையில், 16 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.

இருந்தபோதிலும், அதிரடிப்படையினர் மலைப்பகுதியைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அங்குள்ள இந்திராவதி ஆற்றில் காயத்துடன் மேலும் 11 மாவோயிஸ்ட்கள் உடல்கள் அழுகிய நிலையில் ஆற்றில் மிதந்து வந்ததை அதிரடிப்படையினர் கண்டுபிடித்து மீட்டனர்.

இந்த 11 பேரும் காட்டில் அதிரடிப்படையினர் தேடுதல்வேட்டையில் இருந்தபோது, அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது குண்டடிபட்டு காயத்தால், ஆற்றில் குதித்து இருக்கலாம் என அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே நேற்று காலை வனப்பகுதியில் உள்ள கான்ஹிலா கிராமத்தில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் மீண்டும் அதிரடிப்படையினரைப் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அதிரடிப்படையினரும் துப்பாக்கியால் சுட்டதில் 6 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களில் பல மூத்த தளபதிகளும், 7 பெண்களும் அடங்குவர். கடந்த 36 மணிநேரத்தில் நடந்த என்கவுண்ட்டரில் மொத்தம் 33 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலால் ஆத்திரமடைந்துள்ள மாவோயிஸ்ட்கள் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட், ஆந்திர பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் திடீரென தாக்குதல் நடத்தலாம் என்பதால், பாதுகாப்பு படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x