Last Updated : 26 Apr, 2018 08:43 AM

 

Published : 26 Apr 2018 08:43 AM
Last Updated : 26 Apr 2018 08:43 AM

காங்கிரஸ் மீது முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்துள்ளது: அலிகர் பல்கலையில் சல்மான் குர்ஷித் கருத்தால் சர்ச்சை

காங்கிரஸ் மீது முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்திருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் அவரது கட்சி தலைவர்களுக்கிடையே சர்ச்சை எழுந்துள்ளது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்களுக்காக ‘அம்பேத்கர் ஹால்’ எனும் பெயரில் ஒரு விடுதி உள்ளது. இதன் ஆண்டு விழா விருந்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மாணவருமான சல்மான் குர்ஷித் பங்கேற்றார். அவருடன் சட்டத்துறை மாணவர்கள் கலந்துரையாடினர்.

அதில் ஒருவர் கூறும்போது, “அலிகர் முஸ்லிம் பல்கலை. தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் 1948-ல் செய்யப்பட்ட முதல் திருத்தம், பிறகு 1950-ல் குடியரசுத் தலைவரின் முதல் உத்தரவு, தொடர்ந்து மீரட்டின் ஹாசீம்புரா, மலியானா மற்றும் முசாபர்நகர் ஆகியவற்றுடன் தொடரும் மதக் கலவரங்களின் நீண்ட பட்டியல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தவை. அயோத்தியில் பாபர் மசூதியினுள் சிலை வைத்தது, மூடப்பட்ட மசூதியின் கதவுகளை திறந்தது, பூஜைக்கு அனுமதித்தது, பாபர் மசூதியை இடித்தது ஆகிய நிகழ்வுகளின்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. எனவே, காங்கிரஸின் கைகளில் படிந்த முஸ்லிம்களின் ரத்தக்கறைகளை என்ன சொல்லி கழுவப் போகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சல்மான் கூறும்போது, “இது ஒரு அரசியல் ரீதியான கேள்வி. காங்கிரஸ் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது. நானும் காங்கிரஸ் கட்சியின் அங்கமாக இருப்பதால் இதை ஒப்புக்கொள்கிறேன். இதற்காக உங்களை எவராவது தாக்கினால் பாதுகாப்பதற்காக நாங்கள் வர வேண்டாம் என்கிறீர்களா? ” என்றார்.

குர்ஷித்தின் இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பி.எல்.புனியா கூறும்போது, “சல்மானின் கருத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் நடந்தவை அனைவரும் அறிந்தவையே” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x