வாக்காளரை கன்னத்தில் அறைந்த ஜெகன் கட்சி வேட்பாளர் மீது வழக்கு

வாக்காளரை கன்னத்தில் அறைந்த ஜெகன் கட்சி வேட்பாளர் மீது வழக்கு
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் தெனாலி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் மாவட்டம் தெனாலி ஐத்தாநகர் வாக்குச் சாவடிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவக்குமார் தனது ஆதரவாளர்களுடன் திங்கட்கிழமை காலை வாக்களிக்க வந்தார். அப்போது அவர் வரிசையில் நிற்காமல் நேராக தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கை செலுத்தினார்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் இதைக்கண்டு எரிச்சலடைந்தனர். இதுகுறித்து விமர்சனம் செய்த சுதாகர் என்பவரின் கன்னத்தில் ‘பளார்’ என வேட்பாளர் சிவக்குமார் ஒரு அறை விட்டார்.

சற்றும் தாமதிக்காத சுதாகர், சிவக்குமாரின் கன்னத்தில் பதிலுக்கு அறைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமாரின் ஆதரவாளர்கள் சுதாகரை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து தேர்தல் முடியும் வரை சிவக்குமாரை வீட்டுக் காவலில் வைக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் எம்.எல்.ஏ வேட்பாளர் சிவக்குமார் மற்றும் 7 பேர் மீது போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in