Last Updated : 27 Apr, 2018 07:47 AM

 

Published : 27 Apr 2018 07:47 AM
Last Updated : 27 Apr 2018 07:47 AM

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா நியமனம்:நீதிபதி கே.எம்.ஜோசப் நியமன பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதால் சர்ச்சை

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட இருவரில், இந்து மல்கோத்ராவை மட்டும் நீதிபதியாக நியமித்த மத்திய அரசு, நீதிபதி கே.எம்.ஜோசப் நியமன பரிந்துரையை திருப்பி அனுப்பியது. இதனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ள இந்து மல்கோத்ரா ஆகிய இருவரது பெயர்களை, தலைமை நீதிபதி அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்திருந்தது. இதில், இந்து மல்கோத்ராவை உச்ச நீதிமன்ற புதிய நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர் பதவியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள முதல் பெண் நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கே.எம்.ஜோசப் பெயரை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய சட்டத்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியபோது, அந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத் அரசு அமர உத்தரவிட்டவர் நீதிபதி ஜோசப் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விகாஷ் சிங், “மத்திய அரசின் நடவடிக்கை வருத்தமளிக்கிறது. நீதித் துறை சுதந்திரத்தில் தலையிடுவது தேவையற்றது. இது மிக முக்கிய விவகாரம் என்பதால் உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து நாடு முழுவதும் தலைவர்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.

இதற்கிடையே, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், “இந்து மல்கோத்ரா நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். நீதிபதி ஜோசப்பை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனு குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று முறையிட்டார்.

தடை விதிக்க முடியாது

குடியரசுத் தலைவர் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி, “நீங்கள் கோருவது கற்பனைக்கும் எட்டாதது, பொருத்தமற்றது, நெறிகளுக்கு எதிரானது. குடியரசுத் தலைவர், ஒருவரை நீதிபதியாக நியமித்தால், அந்த உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் சட்டம். நீதிபதி ஜோசப் நியமனத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியதில் எந்தத் தவறும் இல்லை. மத்திய அரசு தனது அதிகார வரம்புக்குட்பட்டுதான் செயல்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

அப்போது இந்திரா ஜெய்சிங், “இரண்டு பரிந்துரைகளில் ஒன்றை மட்டும் மத்திய அரசு பிரிக்க கூடாது. இரண்டையும் ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். நீதித் துறையின் சுதந்திரம் குறித்து மட்டுமே நான் கவலைப்படுகிறேன்” என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், “மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. அந்த கருத்தை பரிசீலிக்கலாம். அதே நியமனத்தை மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தால், இப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x