Published : 11 May 2024 04:55 AM
Last Updated : 11 May 2024 04:55 AM

சீனாவின் பிரம்மாண்ட ஃபியூஜியன் போர்க்கப்பலால் நெருக்கடியை சந்தித்துள்ள இந்திய கடற்படை

சீனாவின் புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஃபியூஜியன்.

புதுடெல்லி: சீனா 80 ஆயிரம் டன் எடையுள்ள பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை உள்நாட்டில் தயாரித்து சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதற்கு ஃபியூஜியன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது விரைவில் சீன கடற்படையில் இணைக்கப்படவுள்ளது. மிக நவீன தொழில்நுட்பத்தில் இந்த கப்பலை சீனா தயாரித்துள்ளதால், சீன கடற்படையில் இந்த கப்பலின் வரவு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

ஃபியூஜியன் கப்பல் சீன கடற்படையில் இணைந்தபின், இந்திய-பசிபிக் கடல் பகுதியில் அதன் பலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் பல விமானம் தாங்கி போர்க்கப்பல்களை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. தற்போது 3 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை சீனா வைத்துள்ளது. அதன் பலம் அதிகரித்து வருவது இந்திய கடற்படைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடற்படையில் தற்போது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும்ஐஎன்ஸ் விக்ராந்த் ஆகிய இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மட்டுமே உள்ளன. இந்திய கடற்படைக்கும் மிக பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பல் தேவை. சீனாவின் ஃபியூஜியன் போன்ற கப்பலை தயாரிக்க ரூ.56,000 கோடி செலவாகும். அதில் உள்ள போர் விமானங்களை வாங்க ரூ.66,000 கோடி செலவாகும்.

ஆனால் தற்போதைக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் போன்ற சிறிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தயாரிப்பதற்கு ஒப்புதல் அளிப்பதை மட்டுமே மத்திய அரசு பரிசீலிக்கிறது. தற்போது அமெரிக்கா, சீனா, இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ரஷ்ய கடற்படைகளில் மட்டுமே விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் அமெரிக்காவிடம் மட்டுமே 11 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. மற்ற நாடுகளிடம் ஒரு சில விமானம் தாங்கி கப்பல்கள் மட்டுமே உள்ளன. மத்தியில் அடுத்து வரும் அரசுகள் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பல் தயாரிக்க ஒப்புதல் அளித்தால், சீன கடற்படையுடன் போட்டி போடும் விதத்தில் இந்திய கடற்படையும் வலுப்பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x