Published : 10 May 2024 04:53 AM
Last Updated : 10 May 2024 04:53 AM

தேர்தல் பிரச்சாரம் செய்வது அடிப்படை உரிமை அல்ல: கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் தர ஈ.டி. எதிர்ப்பு

புதுடெல்லி: தேர்தல் பிரச்சார உரிமை, அடிப்படை உரிமை அல்ல. பிரச்சாரத்துக்காக இதுவரை எந்த அரசிய தலைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதில்லை’’ என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை (ஈ.டி) தெரிவித்துள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில், திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக இன்று உத்தரவு பிறக்கப்படலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

சட்டப்படியான உரிமை இல்லை: இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனுவில், கேஜ்ரிவாலை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் பிரச்சார உரிமை, அடிப்படை உரிமையோ, அரசியல் சாசன உரிமையோ அல்லது சட்டப்படியான உரிமையோ அல்ல. தேர்தல் பிரச்சாரத்துக்காக இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதில்லை.

நாட்டில் ஆண்டு முழுவதும் எங்காவது ஓர் இடத்தில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டில் 124 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தேர்தல் பிரச்சாரத்துக்காக, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், எந்த அரசியல்வாதியையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைக்க முடியாது. இந்த தேர்தலில் கேஜ்ரிவால் போட்டியிடவும் இல்லை. எனவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கூடாது. இவ்வாறு அமலாக்கத்துறையின் புதிய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x