Published : 10 Apr 2018 01:26 PM
Last Updated : 10 Apr 2018 01:26 PM
வருமானவரி விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ள மத்திய அரசு, திருநங்கைகள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, அவர்கள் தங்கள் பாலினத்தை குறிக்க தனிப்பிரிவு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இதுநாள்வரை, பாலினத்தை குறிக்கும் கட்டத்தில் ஆண், பெண் இருபாலினம் மட்டுமே இருந்தது. முதல்முறையாக திருநங்கைகள் தங்களுக்கான பாலினத்தை அதாவது மூன்றாம் பாலினத்தை குறிக்க தனிக்கட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதில் திருநங்கைகள் தங்களை மூன்றாம் பாலினமாக குறிப்பிட்டு பான்கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விதிமுறைகளை வகுத்துள்ள மத்திய நேர்முக வரிகள் வாரியம், முறைப்படியான அறிவிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.
பான்கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, திருநங்கைகளை எந்த பிரிவில் சேர்ப்பது என்ற குழப்பம் அதிகாரிகளுக்கு இருந்துவந்தது. அவர்கள் பிறப்பு சான்றிதழில் ஆணாகவும், தற்போது பெண்ணாகவும் மாறி இருப்பதால், குழப்பம் நீடித்தது. இதனால், திருநங்கைகளுக்கு பான்கார்டு வழங்க முடியாமல் பல்வேறு மாநிலங்களில் இழுபறி நீடித்து வந்தது.
இதற்கிடையே உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில், திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, வருமானவரித்துறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, பான்கார்டுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்ப படிவத்தில் திருநங்கைகள் தங்களுக்கான பாலினத்தை குறிக்க தனிக்கட்டம் தரப்பட்டுள்ளது.
இது குறித்து வருமானவரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஆதார் கார்டு, பான்கார்டு பெறுவதில் திருநங்கைகளுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. ஆதார் கார்டு பெற்றவர்களுக்கு, பான் கார்டு வழங்கமுடியாத சூழலும் நீடித்தது. இதையடுத்து, இந்த புதிய திருத்தம் மூலமாக அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு, பான்கார்டு பெறலாம்.
பான்கார்டுக்கு விண்ணப்பம் செய்யும்போது 49ஏ, 49ஏஏ ஆகிய படிவத்தில் திருநங்கைகள் தங்களுக்குரிய பாலினத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்’ ’எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT