Published : 09 May 2024 04:19 AM
Last Updated : 09 May 2024 04:19 AM

மக்களவைத் தேர்தல் 3-வது கட்ட வாக்குப்பதிவு: போபாலில் வாக்களித்தவருக்கு குலுக்கல் முறையில் வைர மோதிரம் பரிசு

வாக்குச்சாவடியில் நடைபெற்ற குலுக்கல் போட்டியில் வைர மோதிரம் பரிசு வென்ற யாகோஜ் சாஹு (இடமிருந்து 3-வது)

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் நேற்றுமுன்தினம் மக்களவைத் தேர்தலின் 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. போபால் நகரிலுள்ள சார் இம்லி வாக்குச்சாவடியானது பொதுவாக விஐபி வாக்குச்சாவடி என்று தொன்றுதொட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சார் இம்லி வாக்குச்சாவடியில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது இங்குவாக்காளர்களைக் கவர்வதற்காகவும், அதிக அளவில் வாக்கு சதவீதத்தைப் பெறுவதற்காகவும் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று போபால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக ஏராளமான வாக்காளர்கள் குவிந்தனர். காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

சார் இம்லி வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களை வரவேற்கவாயிலில் வண்ண பலூன்கள் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தன. மேலும் வருபவர்களுக்கு சுவையான குளிர்ந்த குடிநீர், பழச்சாறு, பழங்கள் போன்றவையும் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்பட்டன.

முதல் குலுக்கல் காலை 10 மணிக்கு நடைபெற்று அவர்களுக்கு டி-ஷர்ட்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

மேலும் சிறப்புப் பரிசுகளாக முதல் பரிசு பெறுபவருக்கு வைர மோதிரம், 2-வது பரிசு பெறுபவருக்கு மிக்ஸர்-கிரைண்டர் ஆகியவையும் வழங்கப்பட்டன.

அழகிய வண்ணக் காகிதங்கள் சுற்றப்பட்டு வாக்காளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 10 மணி, பிற்பகல் 2 மணி, மாலை 6 மணி என 3 நேரங்களில் குலுக்கல் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை போபால் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.

மேலும் வாக்காளர்களுக்கு பரிசாக டி-ஷர்ட், குடிநீர் பாட்டில்கள் மட்டுமல்லாமல் வெயிலில் இருந்து காப்பதற்கு தொப்பியும் வழங்கப்பட்டது. முதல் பரிசாக வைர மோதிரம் பெற்ற வாக்காளர் யாகோஜ் சாஹுவை, அதிகாரிகள் பாராட்டினர்.

முதல் பரிசு பெற்ற யாகோஜ் சாஹு கூறும்போது, “எனது மனைவிதான் வற்புறுத்தி போட்டியில் பங்கேற்க வைத்தார். அதன் பின்னர் எனது பெயரை எழுதி, குலுக்கல் பெட்டியில் போட்டேன். எனக்கு வைர மோதிரம் பரிசு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு புதுமையான திட்டம். இதன்மூலம் அதிக அளவில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றுவர் என்றார்.

இந்த குலுக்கல் திட்டத்தின் கீழ் 4 பேருக்கு வைர மோதிரம் (4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா ஒன்று) வழங்கப்பட்டதாகவும், 5-வது வைர மோதிரம் பம்பர் குலுக்கல் மூலம் விரைவில் வழங்கப்படும் என்றும் போபால் மாவட்ட ஆட்சியர் கவுசலேந்திர விக்ரம் சிங் தெரிவித்தார். இதுதவிர சிறிய அளவிலான பரிசுகள் 200 பேருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x