டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஜாமீன் குறித்து நாளை உத்தரவு: உச்ச நீதிமன்றம் தகவல்

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஜாமீன் குறித்து நாளை உத்தரவு: உச்ச நீதிமன்றம் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் குறித்து நாளை (மே 10) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் மே 7-ம் தேதி விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இந்த மனுவை விசாரித்தது.

தேர்தலை முன்னிட்டு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் அலுவலக பணியில் ஈடுபடக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். அவர் அரசு கோப்புகள் எதிலும் கையெழுத்திட மாட்டார் என அவரது வக்கீல் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

விவசாயியைவிட மேலானவரா?: இதற்கு அமலாக்கத் துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘‘மக்கள் பிரதிநிதிகள் தொடர்புடைய 5 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை எல்லாம் ஜாமீனில் விடுவிக்க முடியுமா? ஒரு விவசாயிக்குகூட அறுவடை, விதை விதைப்பு போன்ற முக்கிய பணிகள் உள்ளன. விவசாயியைவிட அரசியல்வாதி மேலானவரா?’’ என கூடுதல் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தார் கேள்வி எழுப்பினார்.

அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘இது அரசியல்வாதியின் வழக்கா, சாதாரண நபர் வழக்கா என்று நாங்கள் பார்ப்பது இல்லை. ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் சில சிறப்பு காரணங்கள் உள்ளன. விலக்குக்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. தேர்தல் நடைபெறுவதால்தான் இதுகுறித்து நாங்கள் பரிசீலிக்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்றும் விசாரணை நடந்தது. அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜுவிடம் நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, ‘‘அர்விந்த் கேஜ்ரிவால் ஜாமீன் மனு மீது மே 10-ம் தேதி (நாளை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படலாம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in