Published : 09 May 2024 05:09 AM
Last Updated : 09 May 2024 05:09 AM

நட்பு நாடுகளுடன் சேர்ந்து தென் சீன கடல் பகுதியில் 3 இந்திய போர்க் கப்பல்கள் பயிற்சி

புதுடெல்லி: சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகளின் கடற்படையுடன் தென் சீனகடல் பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக 3 இந்திய போர்க் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றுள்ளன.

தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு அண்டை நாடுகளுடன் சீனாவுக்கு எல்லைப் பிரச்சினை நிலவுகிறது. அதோடு மட்டும் அல்லாமல் இந்திய பெருங்கடல் பகுதியிலும் தனது 4 ஆய்வு கப்பல்களை சீனா அனுப்பியுள்ளது. இந்த கப்பல்கள், சீன போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் போக்குவரத்துக்கான தரவுகளை சேகரிப்பதோடு, இந்தியாவின் ஏவுகணை சோதனைகளையும் கண்காணித்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய கடற்படை யின் ஐஎன்எஸ் டெல்லி, டேங்கர் கப்பல் ஐஎன்எஸ் சக்தி, நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன்வாய்ந்த ஐஎன்எஸ் கில்டன் ஆகிய 3 போர்க்கப்பல்கள் தென் மண்டல கமாண்டர் ரியர் அட்மிரல் ராஜேஷ் தன்கர் தலைமையில் தென் சீன கடல் பகுதிக்கு சென்றுள்ளன. தற்போது இந்த 3 கப்பல்களும் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளன.

இவை சிங்கப்பூர் கடற்படையுடன் இணைந்து தென் சீன கடல் பகுதியில் கூட்டுப்பயிற்சி மேற்கொள்கின்றன. இரு நாட்டு கடற்படை இடையே கடந்த 30 ஆண்டுகளாக நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது. இரு நாட்டு போர்க்கப்பல்களும், பரஸ்பர பயணம், கூட்டுப் பயிற்சி போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. மேலும், வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசியான் நாடுகளுடனும் இந்திய போர்க் கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x