குற்றப்பின்னணி உடையவர்கள் பட்டியலில் குழந்தை, அப்பாவிகள் பெயர் இடம்பெற கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

குற்றப்பின்னணி உடையவர்கள் பட்டியலில் குழந்தை, அப்பாவிகள் பெயர் இடம்பெற கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தின் ஆக்லா சட்டப்பேரவை தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, அவர் மோசமான நடத்தைகொண்டவர் (குற்றப் பின்னணி பட்டியல்) என டெல்லி காவல் துறை கடந்த ஆண்டு அறிவித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமனதுல்லா கான் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அமனதுல்லா கான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, அப்பாவியான தனது மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களும் டெல்லி காவல் துறையின் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அமனதுல்லா கான் தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில் இந் தவழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது: ஒரு நபரை குற்றப் பின்னணி கொண்டவர் என அறிவிப்பது காவல் துறையின் உள் ஆவணங்களில் இடம்பெற வேண்டிய விஷயம். இதை பொது தளத்துக்கு கொண்டுவரக்கூடாது. மேலும், உரிய ஆதாரம் இல்லாதபட்சத்தில் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிகளின் பெயர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பட்டியலில் இடம்பெறக்கூடாது.

குறிப்பாக, சமுதாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பட்டியலில் இடம்பெறாமல் தடுக்க வேண்டியது மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல் துறை அதிகாரிகளின் பொறுப்பு.

இதை முன்னுதாரணமாகக் கொண்டு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும். இந்த உத்தரவின் நகலை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்களுக்கு பதிவாளர் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in