Published : 08 May 2024 04:59 AM
Last Updated : 08 May 2024 04:59 AM

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி உள்ள கேஜ்ரிவாலின் காவல் மே 20 வரை நீட்டிப்பு

அர்விந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தின் அனுமதியுடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். கடந்த ஏப். 1 முதல் அவர் டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.

அவரது காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து காணொலி வாயிலாக விசாரணை நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை: அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் கேஜ்ரிவால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வலியுறுத்தினார். இதற்கு அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா கூறியதாவது: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களைத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைபெறவில்லை என்றால் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்த கேள்வியே எழுந்திருக்காது. மக்களவைத் தேர்தல்நடைபெறுவதால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதுகுறித்து பரிசீலிக்கப்படுகிறது. அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அரசுஅலுவல்களில் ஈடுபடக்கூடாது. இதை கேஜ்ரிவால் தரப்பு உறுதிசெய்ய வேண்டும்.அமலாக்கத்துறை சார்பில் வாதிட கூடுதல் அவகாசம் கோரப்படுகிறது. இதுகுறித்துமே 9-ம் தேதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விரைவில் முக்கிய உத்தரவை பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவிதா மீது குற்றப்பத்திரிகை: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கடந்த மார்ச் 15-ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் உள்ளார்.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த 2 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர் முடிவு செய்துள்ளார். அவரது நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா நேற்று உத்தரவிட்டார்.

இந்த சூழலில் ஒரு வாரத்துக்குள் கவிதா மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x