ஹரியாணாவில் பாஜகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற 3 சுயேச்சை எம்எல்ஏக்கள்

சுயேச்சை எம்எல்ஏக்கள்
சுயேச்சை எம்எல்ஏக்கள்
Updated on
1 min read

சண்டிகர்: ஹரியாணாவில் பாஜக ஆட்சியை ஆதரித்துவந்த மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஹரியாணா சட்டப்பேரவை மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்டது. எனினும், தற்போது 88 உறுப்பினர்களே உள்ளனர். முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு அவருக்குப் பதிலாக நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார். இதனால், லால் கட்டரின் தொகுதியான கர்னால் தொகுதி காலியானது. இதேபோல் ரானியா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ரஞ்சித் சவுதாலா, ஆளும் பாஜக அரசை ஆதரித்து பாஜகவில் இணைந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால், தற்போது சட்டசபையின் பெரும்பான்மை பலம் 45 என்ற நிலையில் பாஜக வசம் 46 எம்எல்ஏக்கள் இருந்தனர். இந்நிலையில் தான் மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களான சோம்பிர் சங்வான் (தாத்ரி), ரந்தீர் சிங் கோலன் (புண்ட்ரி), மற்றும் தரம்பால் கோண்டர் (நிலோகேரி) ஆகியோர் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

ஹரியாணா காங்கிரஸ் தலைவர் சவுத்ரி உதய்பன் மற்றும் ஹரியானா மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா முன்னிலையில் மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் மாநிலத்தில் பாஜவுக்கான பெரும்பான்மை பலம் குறைந்துள்ளது. 43 எம்எல்ஏக்களே பாஜக வசம் உள்ளனர். இதனால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஹரியாணாவில் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in