Published : 07 May 2024 06:22 AM
Last Updated : 07 May 2024 06:22 AM

ரொட்டி கடை நடத்தும் 10 வயது சிறுவன்: கல்வியைத் தொடர உதவிக் கரம் நீட்டினார் ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா - ரொட்டி கடை நடத்தும் ஜஸ்பிரீத்

புதுடெல்லி: டெல்லி திலக் நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜஸ்பிரீத். அவரது தந்தை திலக் நகர் பகுதியின் சாலையோரத்தில் ரொட்டி கடை நடத்தி வந்தார். திடீரென அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அண்மையில் உயிரிழந்தார்.

தந்தையை இழந்தாலும், தாய்காப்பாற்றுவார் என்று நம்பியிருந்த ஜஸ்பிரீத்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது தாய், சொந்த மகனையும் மகளையும் கைவிட்டு வேறொரு நபருடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டார்.

உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் 10 வயது சிறுவன் ஜஸ்பிரீத் தனது தந்தையின் சாலையோர ரொட்டி கடையை நடத்திவருகிறார். காலையில் ஜஸ்பிரீத்தும் அவரது 14 வயது அக்காவும் பள்ளி செல்கின்றனர். மாலையில் இருவரும் சேர்ந்து ரொட்டி கடையை நடத்துகின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் சிறுவன் ஜஸ்பிரீத்தே கடையை கவனித்து வருகிறான். டெல்லியை சேர்ந்த யூடியூபர் சரப்ஜித் சிங் அண்மையில் சிறுவன் நடத்தும் கடைக்கு சாப்பிட சென்றார். அப்போது சிறுவனின் பின்னணியை கேட்டு அவர் மனம் உடைந்தார். சிறுவன் ஜஸ்பிரீத் குறித்த வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, பொதுமக்களிடம் உதவி கோரினார்.

சமூக வலைதளங்களிலும் வீடியோ வைரலாகி சிறுவனுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “துணிச்சலின் மறுபெயர் ஜஸ்பிரீத். அவனது கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. சிறுவனின் செல்போன் எண், முகவரியை எனக்கு தெரியப்படுத்துங்கள். மஹிந்திரா அறக்கட்டளை குழு சிறுவனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்’’ என்று உறுதி அளித்துள்ளார்.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஜர்னைல் சிங், சிறுவனை நேரில் சந்தித்து அவனுக்கு தேவையான உதவிகளை வழங்கினார். அவனது கல்வி செலவை ஏற்றுக் கொள்ளவும் உறுதி அளித்தார். பல்வேறு கட்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிறுவனை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x