Published : 07 May 2024 07:44 AM
Last Updated : 07 May 2024 07:44 AM

யாதவர், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் உ.பி.யின் 10 தொகுதியில் இன்று வாக்குப்பதிவு

புதுடெல்லி: மக்களவைக்கு மூன்றாம் கட்டமாக நாடு முழுவதிலும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 94 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற 10 தொகுதிகள், யாதவர் மற்றும் முஸ்லிம்களின் களமாகக் கருதப்படுகிறது.

இந்த 10 தொகுதிகளில் பெரும்பாலானவர்களாக யாதவர்கள் இடம்பெற்றுள்ளனர். மீதம் உள்ளவர்களில் முஸ்லிம்களும் அதிகமாக உள்ளனர். இவற்றில் ஏட்டாவில் லோதி சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இந்த சமூகம் கல்யாண்சிங் குடும்பத்தினரால் பாஜகவுக்குஆதரவாக உள்ளது. சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்திருந்த ராஷ்டிரிய லோக் தளம், பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது. இதன் பலனாக 10 தொகுதிகளிலும் ஜாட் சமூகத்தினர் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர்.

2014 முதல் பாஜக இந்த பத்து தொகுதிகளில் கணிசமான தொகுதிகளில் வென்று வருகிறது. 2014-ல் பத்தில் ஏழு மற்றும் 2019-ல்எட்டு தொகுதிகளை பாஜக வென்றிருந்தது. இதனால், யாதவர், முஸ்லிம் வாக்குகளை நம்பி அரசியல் செய்யும் சமாஜ்வாதிக்கு இந்த 10 தொகுதிகள் மிக முக்கியமாகி விட்டன.

கடந்த தேர்தலில் மெயின்புரியில் முலாயமும், சம்பலில் ஷபிக்கூர் ரஹ்மானும் வென்றிருந்தனர். இந்த தேர்தலில், ஷபிக்கூரின் பேரன் ஷபிக்கூர் ரஹமன் புர்க்சமாஜ்வாதி சார்பில் போட்டியிடுகிறார். 10-ல் 3 தொகுதிகளில் அகிலேஷின் குடும்பத்தினரே போட்டியிடுகின்றனர். அகிலேஷின் மனைவி டிம்பிள் மெயின்புரியிலும், முலாயமின் சகோதரர் ராம் கோபால் யாதவ் மகன் அக்ஷய் யாதவ் பெரோஸாபாத்திலும் போட்டியிடுகின்றனர். மற்றொரு சகோதரரான ஷிவ்பால் யாதவின் மகன் ஆதித்ய யாதவ், பதாயூ தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த பத்து தொகுதியிலுள்ள முஸ்லிம்களை பாஜக பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை, எனினும், யாதவர்களைக் கவர பாஜக முயற்சி எடுத்துள்ளது. பிஹார், உ.பி.யில் ஆட்சி செய்ய யாதவர்கள் வாக்கு முக்கியம் என்பதை பாஜக உணர்ந்துள்ளது. இதை மனதில் வைத்து யாதவர் சமூகத்தைச் சேர்ந்த மோஹன் யாதவ் மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இவரை யாதவர்களின் தொகுதியில் முக்கியப் பிரச்சாரகராக பாஜக களம் இறக்கி உள்ளது.

2019 தேர்தலில் உ.பியின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்திருந்தது. இந்த முறை இருவரும் பிரிந்ததும் பாஜகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும், சம்பலில் 2019-ல் காங்கிரஸ் வேட்பாளர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்னாம் தற்போது பாஜகவில் இணைந்து விட்டார். மாயாவதியும் தனது கட்சி சார்பில் 5 யாதவ வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது சமாஜ்வாதிக்கு சவாலாகி விட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x