Published : 07 May 2024 08:24 AM
Last Updated : 07 May 2024 08:24 AM

தீவிரவாதிகளிடம் ரூ.134 கோடி பெற்ற விவகாரம் - கேஜ்ரிவாலிடம் என்ஐஏ விசாரணை நடத்த பரிந்துரை

புதுடெல்லி: காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடம் ரூ.134 கோடி பெற்ற விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் என்ஐஏ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு சீக்கியருக்கான நீதி அமைப்பு செயல்படுகிறது. கடந்த2019-ம் ஆண்டில் இந்த காலிஸ்தான் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்து, தீவிரவாத குழுக்கள் பட்டியலில் சேர்த்தது.

கடந்த மார்ச் மாதம் சீக்கியருக்கான நீதி அமைப்பின் தலைவர்குர்பத்வந்த் சிங் கூறும்போது, “2014 முதல் 2022 வரையிலான காலத்தில் எங்கள் தரப்பில் கேஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட கேஜ்ரிவால், தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த சூழலில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடம் ரூ.134கோடி பெற்ற விவகாரம் தொடர்பாக கேஜ்ரிவாலிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்த டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செயலாளருக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறும்போது, “பாஜகவின் முகவராக டெல்லி துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார். பாஜக தலைமையின் உத்தரவின்பேரில் கேஜ்ரிவாலுக்கு எதிராக சதிவலை பின்னப்படுகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x