Published : 06 May 2024 03:24 PM
Last Updated : 06 May 2024 03:24 PM

ராகுல் காந்திக்கு எதிராக 181 துணை வேந்தர்கள், கல்வியாளார்கள் திறந்த மடல்: பின்னணி என்ன?

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் இணைந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு ஒரு திறந்த மடல் எழுதியுள்ளனர். அண்மையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் பற்றி ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் அவர்கள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர். ‘ஒளி தருபவர்கள் எரியூட்டப்படுகிறார்கள்’ என்ற தலைப்பில் அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அண்மையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் பற்றி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அதில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட அமைப்புடன் சார்பு கொண்டிருப்பதாலேயே அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார். உண்மையில் துணை வேந்தர்கள் தேர்ந்தெடுக்கப்படும் செயல்முறையானது தகுதி, புலமை மற்றும் ஒருமைப்பாடு போன்ற மதிப்பீடுகளின் அடிப்படையில் கடுமையான, அதேவேளையில் வெளிப்படைத் தன்மை நிறைந்த நடைமுறைகளைக் கொண்டது.

அவ்வாறாக தேர்ந்தெடுக்கப்படும் நாங்கள் அறிவின் பாதுகாவலர்களாக, கல்வித் துறையின் நிர்வாகிகளாக நிர்வாக ஒருமைப்பாடு, நெறிமுறை, நடத்தை ஆகியவற்றின் உச்ச நிலைகளைப் பேணுவதில் உறுதியுடன் செயல்படுகிறோம். ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக ராகுல் காந்தி துணை வேந்தர் பதவியையே இழிவுபடுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பானவற்றைப் பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, “ஆர்எஸ்எஸ் தொடர்புடையவர்கள் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகிறார்கள். நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுகிறார்கள். நாட்டு மக்களோடும், நாட்டின் எதிர்காலத்தோடும் விளையாடுவது கிரிமினல் குற்றமாகும்” என இந்தக் கடிதத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளார்.

முன்னதாக ராகுல் காந்தி, “பாஜக ஆட்சியில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனம் என்பது தகுதியின் அடிப்படையில் நடைபெறவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததன் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகிறது” என்று விமர்சித்து இருந்தார். அதற்குக் கண்டனம் தெரிவித்தே இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் யோகேஷ் சிங், ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் ராய்ப்பூர் இயக்குநர் ராம் குமார் ககானி உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x