1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது மோடி அரசு: ஐஎம்எப் முன்னாள் இயக்குநர் சுர்ஜித் பல்லா தகவல்

சுர்ஜித் பல்லா
சுர்ஜித் பல்லா
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக ஐஎம்எப்-ன் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குநரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு காணொலி மூலமாக நேற்று அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

வாஜ்பாய் மற்றும் மோடியின் ஆட்சிக் காலத்தில்தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அரசின் கீழ் கடந்த 7-8 ஆண்டுகளில் 10 மில்லியன் அதாவது சுமார் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 2004-2013 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் மிக குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

இந்திய வரலாற்றில் இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு மோடியின் திறமையான நிர்வாகத்தின் கீழ்தான் வேலைவாய்ப்பு பரவலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அன்னிய நேரடி முதலீடு குறைந்து வருவது தொடர்பான சர்ச்சை இருந்தால் அதற்கு அமையவுள்ள புதிய அரசின் கொள்கையில் தீர்வு காணப்பட வேண்டும்.

புள்ளிவிவர சாத்தியக்கூறு களின் அடிப்படையில் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வாக்குகளில் சுமார் ஐந்து சதவீதத்தை அதிகரித்தாலே அந்தக் கட்சிக்கு 330 முதல் 350 இடங்கள் வரை கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை. இவ்வாறு பல்லா தெரிவித்தார்.

2023-24 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் அன்னிய நேரடி முதலீடு 61.7 பில்லியன் டாலரிலிருந்து 59.9 பில்லியன் டாலராக குறைந்தது. அதேபோன்று நிகர முதலீடும் 25 பில்லியன் டாலரிலிருந்து 14.2 பில்லியன் டாலராக கணிசமான சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in