Published : 06 May 2024 07:43 AM
Last Updated : 06 May 2024 07:43 AM

வாக்கு அரசியலுக்காகவே இந்தியா மீது கனடா குற்றம் சுமத்துகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்

ஜெய்சங்கர்

புவனேஸ்வர்: சீக்கிய அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் உள்ள குருத்வாராவுக்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டினார். இதையடுத்து கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.

இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக கரண் ப்ரார் (22), கமல்ப்ரீத் சிங் (22) மற்றும் கரண்ப்ரீத் சிங் (28) ஆகிய 3 இந்தியர்களை கனடா நாட்டு காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது. இவர்களுக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகவும் அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா மீதான கனடா அரசின் குற்றச்சாட்டு குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியா மீது கனடா அரசு குற்றம்சாட்டியது. ஆனால், அது தொடர்பாக எந்த ஆதாரத்தையும் அவர்கள் வழங்கவில்லை. உள் அரசியல் காரணமாகவே ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டிருப்பார். அவரது கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கனடாவில் தேர்தல் நெருங்கியுள்ளது.

காலிஸ்தான் ஆதரவாளர்களில் சில பிரிவினர் கனடாவில் தங்களுக்கான வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. தவிர, சில கட்சிகளும் காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை சார்ந்து இருக்கின்றன. இந்தச் சூழலில் வாக்கு வங்கியை குறிவைத்தே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா குற்றம்சாட்டுகிறது. இவ்வாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x