Last Updated : 01 Apr, 2018 12:37 PM

 

Published : 01 Apr 2018 12:37 PM
Last Updated : 01 Apr 2018 12:37 PM

கடும் துப்பாக்கிச் சண்டை: காஷ்மீரில் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்புபடையினர் அதிரடி

 

காஷ்மீரின் தெற்குப்பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், முக்கிய தளபதிகள் உள்ளிட்ட 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரின் 3 வெவ்வேறு பகுதிகளில் நடந்த என்கவுண்ட்டரில் இந்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி எஸ்.பி. வைத் ஸ்ரீநகரில் நிருபர்களிடம் கூறியதாவது:

சோபாயான் மாவட்டம், திராகாட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர்சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

இதற்கு பாதுகாப்பு படையினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு திருப்பிச் சுட்டனர். இருதரப்பிலும் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே அனந்த்காக் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார், மற்றொரு தீவிரவாதி பாதுகாப்பு படையினரிடத்தில் சரணடைந்தார்.

மூன்றாவதாக சோபியான் மாவட்டம் கச்தோரா பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து அவர்களை பிணையக் கைதிகளாக பிடிக்கும்முயற்சியில் ஒரு தீவிரவாதி முயன்றார். இதை வெற்றிகரமாக முறியடித்த பாதுகாப்பு படையினர் அந்த தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர். ஒட்டுமொத்தமாக 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் சிலர் முக்கியத் தளபதிகளாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கிறோம். இவர்கள் அடையாளம் காணப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்ந்து பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் கடந்த ஆண்டு பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற ரவுப் காண்டே என்பது தெரியவந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்புபடை வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு போலீஸ் டிஜிபி வைத் தெரிவித்தார்.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x