Published : 05 May 2024 07:33 AM
Last Updated : 05 May 2024 07:33 AM

டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய அர்விந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்

பாஜகவில் இணைந்த அர்விந்தர் சிங் லவ்லியை வரவேற்ற அக்கட்சி பிரமுகர்கள்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி நேற்று பாஜகவில் இணைந்தார். டெல்லியின் காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் அர்விந்தர் சிங் லவ்லி.

தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்று அர்விந்தர் காத்திருந்தார். ஆனாலும் காங்கிரஸ் மேலிடம் அவருக்கு வாய்ப்பு தரவில்லை. இதனால் காங்கிரஸ் மேலிடத்தின் மீது அர்விந்தர் சிங் லவ்லி அதிருப்தியில் இருந்தார்.

இதையடுத்து தனது டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவி, காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த மாதம் 28-ம் தேதி விலகினார்.

மேலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதாரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால்தான் காங்கிரஸில் இருந்து விலகியதாகவும் அர்விந்தர் சிங்லவ்லி தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் கூறும்போது, “நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவது இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன்” என்றார்.

இந்நிலையில், நேற்று அர்விந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்துள்ளார். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் அர்விந்தர் சிங். அப்போது, லவ்லியுடன் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் 3 பேர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்

இவர் ஏற்கெனவே காங்கிரஸில் இருந்து விலகி கடந்த 2017-ல் பாஜகவில் இணைந்தார். பின்னர் 2018-ல் பாஜகவிலிருந்து விலகிய லவ்லி மீண்டும் காங்கிரஸுக்கு வந்தார். தற்போது மீண்டும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x